திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உழவர் சந்தை முன்பு உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றக் கோரி விவசாயிகள் இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர் சந்தைக்கு வெளியிலும் 500 மீட்டர் சுற்றளவிலும் அரசு விதிகளை மீறி செயல்படும் காய்கறிக் கடைகளால், சந்தைக்குள் காய்கறி விற்கும் சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து கடந்த 28-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, காபூர் கான் சாலையில் இந்தத் திடீர் போராட்டம் நடைபெற்றது.
மேலும், சந்தைக்குள் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அவர்கள் வலியுறுத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
