தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் வன உயிரின குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 63 நாட்டு வெடிகுண்டுகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டன.
பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வன உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நாட்டு வெடிகுண்டுகள், பல்வேறு வழக்குகளில் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை செயலிழக்கச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சேலம் வெடிமருந்து கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு சிறப்பு குழு ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு குழுவினர் பாலக்கோட்டிற்கு வருகை தந்தனர்.
பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மேக்லாம்பட்டி ஏரி பகுதியில் 63 நாட்டு வெடிகுண்டுகள் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டன.
