கடையநல்லூர் அருகே மின்சாரத்தை சட்ட விரோதமாக பயன்படுத்திய விவசாயிடம் குற்றத்தை மறைக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன்மேனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரத்தை பகுதியை சேர்ந்த சுந்திரபாண்டி என்பவரின் மகன் முருகேசன் (42) .
இவர் தனது தந்தையின் பெயரில் உள்ள சுமார் 6-1/2 ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருவதாகவும், விவசாயத்திற்காக இலவச மின் இணைப்பு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மின்சார பயன்பாடு தொடர்பாக சட்ட விரோதமாக கண்டன்சர் மூலம் மோட்டாரை இயக்கியதாக கூறப்படும் நிலையில், அதனை கடையநல்லூர் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் லைன்மேனாக பணிபுரியும் விஜய் என்பவர் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்த புகைப்படத்தை மின்வாரிய கோட்ட அதிகாரிகளுக்கு அனுப்பினால் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் கட்ட நேரிடும் எனக் கூறியதோடு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.25,000 லஞ்சமாக கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் லைன்மேன் விஜய் என்பவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் விவசாயி முருகேசனை செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் பணம் கேட்டதாகவும், ஆனால் விவசாயி என்னிடம் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என தெரிவித்தாகவும் கூறப்படும் நிலையில் 5,000 – ரூபாய் கேட்டுள்ளார்.
இல்லையென்றால் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க செய்வதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விவசாயி முருகேசன் நேற்று தினம் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவப்பட்ட ரூ.5,000 பணத்தை விவசாயி முருகேசனிடம் கொடுத்து லைன்மேன் விஜயிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது மறைந்திருந்து கண்காணித்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் பால்சுதர் தலைமையிலான போலீசார் லைன்மேன் விஜயை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றத்தை மறைக்க விவசாயிடம் லைன்மேன் லஞ்சம் வாங்கிய சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
