சத்தியமங்கலம் அடுத்த ராமபைலூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 51 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு காலை மற்றும் மதியம் அரசின் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி குழந்தைகளுக்காக தயார் செய்து வழங்குவதற்காக, காலை உணவு தயார் செய்யப்பட்டு இருந்தது.
குழந்தைகளுக்கு வழங்குவதற்கு முன்னர், அங்குள்ள பெண் ஆசிரியர் ஒருவர், காலை உணவை சாப்பிட்டுள்ளார்.
அப்போது சாம்பார் கசந்த நிலையில் இருந்ததால், உடனடியாக யாருக்கும் வழங்க வேண்டாம் எனக் கூறி, அதனை பரிசோதித்துப் பார்த்தனர். அப்போது அதில் சாணி பவுடர் கலக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் செய்த விசாரணையில், அந்தப் பள்ளியில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு, 4 மாதங்களுக்கு முன்னர் பெண்மணி ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண்மணி வேலை நீக்கம் செய்யப்பட்டதை பழி தீர்க்க, அவரது கணவர் கூலி தொழிலாளி ஆறுமுகம் என்பவர் சாணி பவுடரை கலந்து ஒரு மாணவியிடம் கொடுத்து அனுப்பி, அதை சாம்பாரில் கலக்குமாறு கூறியுள்ளார்.
நல்வாய்ப்பாக குழந்தைகள் யாரும் காலை உணவை சாப்பிடாததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இதை அடுத்து சாணி பவுடரை கொடுத்து அனுப்பிய கூலித் தொழிலாளி ஆறுமுகத்தை சத்தியமங்கலம் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
