விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து 13 அடி பள்ளத்தில் மாட்டிக்கொண்ட நகராட்சி ஊழியரை சுமார் 1 மணிநேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
விழுப்புரம் நகராட்சியில் வண்டி மேடு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டது . இதனால் நகராட்சி சார்பில் 13 அடி பள்ளம் தோண்டி பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி பழைய பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டதால் அதனை மாற்றி புதிய பைப் லைன் பொருத்தும் பணி நடைபெற்றது.
அப்போது நகராட்சி ஒப்பந்த ஊழியர் நவீன் பாதாள சாக்கடையில் இருந்த 13 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.
இடுப்பளவு உடல் பள்ளத்தில் சிக்கிக்கொண்ட நிலையில் இதனைக் கண்ட மற்ற பணியாளர்கள் கூச்சலிட்டு உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து இவரை மீட்க முயற்சி செய்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு மேலும் பள்ளம் தோண்டி உள்ளே இருந்த சேற்றை அப்புறப்படுத்தி நவீனை பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட ஊழியர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
