ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி பலியானார். காயமடைந்த மற்றொரு தொழிலாளி மீட்கப்பட்ட நிலையில் வேறு யாரேனும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டி.மானகசேரியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பட்டாசுக்கான மருந்துக்கலவையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் ஒரு அறை தரைமட்டமானது.மேலும் அதில் பணிபுரிந்து வந்த தொழிலாளி ஒருவர் உடல் கருகி பலியானார்.படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வெடி விபத்தில் வேறு ஏதும் தொழிலாளர்கள் சிக்கி உள்ளனரா என்று தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
