திருப்பதி ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்களை
ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரியாக பணியில் இருப்பவர் லோகநாதம்.
தகவல் ஒன்றின் அடிப்படையில் ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திருப்பதியில் இருக்கும் அவருடைய வீடு, திருமலையில் உள்ள அவருடைய முகாம் அலுவலகம், திருப்பதி அருகே ஏற்பேடு கிராமத்தில் இருக்கும் அவருடைய பெற்றோர் வசிக்கும் வீடு ஆகியவற்றில் நேற்று காலை துவங்கி அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பதியில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் ஏராளமான எண்ணிக்கையில் சொத்து பத்திரங்களையும் கைப்பற்றிய அதிகாரிகள் திருப்பதி எஸ் டி வி நகர் பகுதியில் செயல்படு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில் இருக்கும் அவருடைய லாக்கரை திறந்து பார்க்கவும் அவருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், சொத்து பத்திரங்கள் ஆகியவை வாங்கப்பட்டது தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
