சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர்.
பெருமாச்சேரி மேற்கு குரூப் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ரகுராஜன் என்பவருக்கு கடந்த 2-ம் தேதி செல்போன் மூலம் அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
அந்த அழைப்பில் பேசிய நபர், “மற்ற சமூகத்தினரை மணல் அள்ள விடுவாய்… எங்களை மட்டும் மணல் அள்ள விட மாட்டாயா? இன்னும் இரண்டு நாட்களில் நீ இங்கு இருக்கிறாயா என்று பார்ப்போம்” என மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விஏஓ அளித்த புகாரின் அடிப்படையில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் நாகநாதபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் (40), மணிகண்டன் (29) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
