புதுக்கோட்டையில் நடத்துனர் தள்ளிவிட்டதில், அரசுப் பேருந்திலிருந்து கீழே விழுந்து, பழங்குடியின மாணவிகள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநர், நடத்துனர் மீது வெள்ளனூர் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து புதுக்கோட்டை சென்ற அரசுப் பேருந்தில், ரெங்கம்மாள் சத்திரம் அருகே பழங்குடியின மாணவிகள் ஏறியுள்ளனர்.
அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக்கூறி, மாணவிகளை கீழே இறங்குமாறு நடத்துநரும், பேருந்தில் இருந்தவர்களும் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து நடத்துநர் பேருந்தின் கதவை திறந்து, மாணவிகளை வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிட்டதால், சாலையில் விழுந்து 8 மாணவிகள் காயமடைந்தனர்.
மேலும் ஒரு மாணவியின் காலில் பேருந்தின் சக்கரம் ஏறியதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த மாணவிகள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கண்டித்து பழங்குடியின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவிகளை கீழே தள்ளிவிட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பேருந்தின் நடத்துனர் மணிகண்டன் மற்றும் ஓட்டுநர் அர்ஜூனனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் ஓட்டுநர், நடத்துனர் மீது வெள்ளனூர் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
