தூத்துக்குடி அருகே நகையை திருப்பி கேட்ட பெண்ணை வெட்டி கொன்ற காவலரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவருடைய மனைவி பிரியா (39). இவர் அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார்.
இவரது சகோதரி முத்துலட்சுமி என்பவருடன், தட்டார்மடத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் முத்துக்குமார் (36) என்பவர் பழகி வந்தாராம். இதனால் முத்துலட்சுமியின் நகைகளை வாங்கி முத்துக்குமார் அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது.
இதனை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரியா, முத்துக்குமாரிடம் சென்று நகைகளை திருப்பி கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அரிவாளால் பிரியாவை சரமாரியாக வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை போலீசார் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரர் ஒருவர் பெண்ணை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
