கோவை துடியலூர் அருகே உள்ள என் ஜி ஜி ஓ காலனி, அசோகபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சாலை ஓரம் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கஞ்சா மது போதையில் இருந்த நபர் மானபங்கம் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது அவருடன் இருந்த நாய்கள் அவனை கடித்தும், குரைத்தும் அப்பெண்ணை காப்பாற்றிய அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக துடியலூர் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேறு வழக்கை விசாரிக்க சென்றபோது வெளிவந்த உண்மை
கோவை துடியலூர் அருகே உள்ள என் ஜி ஜி ஓ காலனி, அசோகபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டதாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த சிசிடிவி காட்சியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அங்குள்ள ரயில்வே மேம்பால சாலை ஓரமாக அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து கொண்டிருப்பதும், அப்போது அந்த வழியாக கஞ்சா மது போதையில் ஒரு நபர் வருவதும் அவரை கண்ட அங்கிருந்த 2 நாய்கள் குரைத்துக் கொண்டும் இருந்துள்ளது.
அப்போது அந்த பெண்ணிடம் இது உங்க நாயா பாரு பின்னாடியே வந்துட்டு இருக்கு என்கிறார்.
இதைப் பார்த்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கல் எடுத்து அடிங்க நாய் ஓடிவிடும் இது கூட தெரியாத என்கிறார்.
அதை கேட்டு அந்த இளைஞர் கல்லை எடுத்து நாயை துரத்துகிறார். ஆனால் அந்த நாய்கள் சில அடி தூரம் போய்விட்டு மீண்டும் அந்த நபரை பார்த்து குரைத்துக்கொண்டே இருந்துள்ளது.
அந்த சமயத்தில் கஞ்சா மது போதையில் இருந்த நபர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண் சத்தம் போட்டு கத்தியுள்ளார்.
இந்த இளைஞர் அந்த பெண்ணை நோக்கி செல்லும்போது சுதாரித்துக்கொண்ட நாய் துரத்தி வந்து பெண்ணை காப்பாற்ற முயற்சித்தது.
குரைத்தும், கால்களை பிடித்து இழுத்தும் பெண்ணை காப்பாற்றியுள்ளது.
இதையடுத்து பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்த இளைஞரை நாய் துரத்திச் சென்றது.
இதையடுத்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை துடியலூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
