சேலத்தில் முன்னாள் காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது,
கடந்த 10 வருடங்களில் பச்சிளங் குழந்தைகள் திருட்டு என்பது உச்ச கட்டத்தில் உள்ளது.
மனித சமுதாயத்தின் ஆணி வேராக குழந்தை கடத்தல் சம்பவங்கள் உள்ளது. தமிழக அரசு எத்தனை குற்றங்கள் நடந்திருக்கிறது அதில் எவ்வளவு குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்களை அளிக்காமல், கண்டுபிடிக்காத குற்றங்கள் எத்தனை, அதன் விளைவுகள் என்ன? என்பதை கூற வேண்டும்.
குழந்தை கடத்தல் சம்பவங்கள் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது.
காவல்துறையினர் முழுக்க முழுக்க இதை மூடி மறைக்கின்றனர். குழந்தைகள் கடத்தப்பட்டு பிச்சை எடுக்க வைக்கப்படுகிறார்கள்.
பெண் குழந்தைகளை பல்வேறு செயல்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மேலும் அவர்களுக்கு போதை பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. கடத்தப்படும் ஆண் குழந்தைகள் எதிர்காலத்தில் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் உருவாக்கப்படுகிறார்கள் என குற்றம் சாட்டிய பொன் மாணிக்கவேல், இதை சொல்வதால் நான் சினிமா டைரக்டர் இல்லை முன்னாள் போலீஸ் ஐஜி என்றார்.
பச்சிளங்குழந்தைகள், முதல் 18 வயது வரையிலான பெண் பிள்ளைகள் கடந்த 2017 முதல் ஆண்டு வாரியாக 10 ஆண்டுகளில் கண்டுபிடிக்க முடியாத கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை புள்ளிவிவரங்களோடு கூறிய அவர், குறிப்பாக அரசு மருத்துவமனை மற்றும் தர்ம வைத்திய சாலைகளில் பெண் குழந்தைகள் அதிகளவில் கடத்தப்படும் மையமாக உள்ளது.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 12 குழந்தைகள் கடத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இந்த குற்றங்களை சமுதாயத்தின் மீது இழைக்கப்பட்ட குற்றச்செயல் என்பதின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்திய அவர், மக்கள் வரிப்பணத்தில் பல நூறு கோடிகளை செலவழித்து முதலமைச்சரின் கார் செல்ல ஆடம்பர பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஆனால் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு வைத்தியசாலையில் குறைந்தபட்ச பாதுகாப்பு கூட இல்லை. முதலமைச்சரின் ஆடம்பர பந்தா பாதுகாப்பை குறைத்து குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
