பல்லடம் அருகே சமூக வலைதளத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்களிடையே அடுத்தடுத்து நடந்த மோதல் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், கடந்த 30-ம் தேதி இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.
அறிவொளி நகரைச் சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுவன் இது குறித்து இன்ஸ்டாவில் குறுஞ்செய்தி அனுப்பி கேட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அப்போது இருவருக்குமிடையே எழுந்த காரசாரமான வாக்குவாதம் முற்றவே, சேடபாளையம் சிறுவன் “எங்கள் பகுதிக்கு வந்து பார்” எனக் கூறி சவால் விடுத்துள்ளார்.
சவாலை ஏற்றுக்கொண்ட அறிவொளி நகர் சிறுவன், தனது நண்பர்களான 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களை அழைத்துக் கொண்டு சேடபாளையம் பகுதிக்குச் சென்று, அச்சிறுவனைச் சரமாரியாகத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இத்தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில், மறுநாள் இரவு சேடபாளையம் சிறுவன் தனது தரப்பில் 10-க்கும் மேற்பட்ட நண்பர்களைத் திரட்டிக்கொண்டு அறிவொளி நகருக்குச் சென்று, தன்னைத் தாக்கிய சிறுவனைத் திருப்பித் தாக்கியுள்ளார்.
சேடபாளையம் சிறுவர்கள் தாக்குதலில் ஈடுபட்டபோது, அறிவொளி நகர் பகுதியில் உள்ள மற்ற சிறுவர்களும் அங்கு ஒன்று திரண்டனர். இதனால் அஞ்சிய சேடபாளையம் சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால், அவர்களுடன் வந்த 17 வயது சிறுவன் ஒருவன் மட்டும் அறிவொளி நகர் சிறுவர்களிடம் தனியாகச் மாட்டிக்கொண்டார்.
அவரை அங்குள்ள சிறுவர்கள் ஒன்று சேர்ந்து சரமாரியாகத் தாக்கினர்.
இச்சம்பவத்தைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகப் பல்லடம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த சிறுவனை மீட்டு,தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்களை பெற்றோருடன் காவல் நிலையத்திற்கு வருமாறு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அதன்படியே, இன்று பெற்றோர் முன்னிலையில் சிறுவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பையும் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையின் இறுதியில், சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் மாதைய்யன் அறிவுரைகளை வழங்கினர்.
குறிப்பாக, “வளரும் வயதில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், பள்ளி கல்லூரியில் இருந்து வந்த பின் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் நண்பர்கள் சேர்க்கை எப்படி உள்ளது என்பதைப் பெற்றோர் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்” என வலியுறுத்திக் கூறினார்.
