சென்னையில் உள்ள இரண்டு மென்பொருள் நிறுவனங்களில் சுமார் 50 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பெருங்குடி தரமணி இணைக்கும் பிரதான சாலையான எம்ஜிஆர் சாலையில் உள்ள TYCHE டவர் வளாகத்தில் செயல்பட்டு வரும் DENTSU மென்பொருள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கந்தன்சாவடியில் உள்ள மென் பொருள் நிறுவன அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல் அதே சாலையில் உள்ள குளோபல் இன்போசிட்டி பார்க் வளாகத்தில் செயல்பட்டு வரும் விளம்பரம், வெளியீடு மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனமான ‘Tag India Private Limited’ அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள இரண்டு முன்னணி நிறுவனத்தில் 15 வாகனங்களில் வருகை தந்த சுமார் 50 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நிதிப் பரிவர்த்தனை மற்றும் ஆவணச் சரிபார்ப்பில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
வருமானவரித்துறை சோதனை முடிவு பெற்ற பின்னரே என்ன மாதிரியான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிய வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
