ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தவெக தரப்பில் இருந்து வரும் வரை, நாங்கள் அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம் என்று அறிவிக்க காங்கிரஸ் அமைச்சர்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? அதை அவர்கள் முதலில் செய்து காட்டட்டும் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால சாதனை விளக்க கூட்டங்களை தமிழ்நாட்டில் நடத்துவது தொடர்பான பயிலரங்கம் திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,
காவிரி நீரைத் தமிழக விவசாயிகளுக்குப் பெற்றுத் தருவதில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.
“சட்டமன்றத்தில் காவிரிப் பிரச்சினை தொடர்பான முக்கிய விவாதங்கள் எதுவும் நடக்காமல், தனிப்பட்ட விவாதங்கள் மட்டுமே நடந்து வருகின்றன.
கர்நாடகாவில் வெள்ளம் வந்ததால் மட்டுமே நமக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதை நாம் பெருமையாகப் பேசிக் கொள்வதை விட நமக்கு வேறு அவமானம் எதுவும் இல்லை.
முதல்வர் விஜய் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து, ராகுல் காந்திதான் விஜய்க்கு முதலில் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.
தவெக காங்கிரஸ் கூட்டணி நீடித்தால் என்ன, நீடிக்காவிட்டால் நமக்கு என்ன?
ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தவெக தரப்பில் இருந்து வரும் வரை, நாங்கள் அமைச்சரவையில் நீடிக்க மாட்டோம் என்று அறிவிக்க காங்கிரஸ் அமைச்சர்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? அதை அவர்கள் முதலில் செய்து காட்டட்டும்.
தவெக ஆட்சியில் சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ மட்டுமே அதிகரிக்கிறதே தவிர, வேறு எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை.
தமிழ்நாட்டை யார் ஆட்சி செய்தாலும் இங்கு மக்கள் தான் ஆளப்படுகிறார்கள். இந்த அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை.
மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களைச் சரியாகக் கொண்டு சேர்ப்பது மட்டுமே பிரதமர் மோடியின் எண்ணமாக உள்ளது.
அதற்காக நாம் மோடிக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
‘திராவிட இயக்கங்கள் இல்லாத தமிழகம்’ என்று நான் எப்பொழுதும் கூறவில்லை, ‘கழகங்கள் இல்லாத தமிழ்நாடு’ என்றுதான் கூறி உள்ளேன். ஆனால், தற்போதே அது நடந்துவிட்டது என்று நான் பெருமைபட மாட்டேன். இப்போது ஆட்சியில் இருப்பது மற்றொரு கழகம்தான் என தெரிவித்தார்.
