கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.
குறிப்பாக காட்டு யானைகள் மலை மற்றும் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன.
ஊருக்குள்ள உள்ள கடைகள் மற்றும் வீடுகளையும் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை கணுவாய் சோமையம்பாளையம் சுற்று பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. அப்பொழுது அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டு சென்றுள்ளது.
சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியில் வந்த ஒரு பெண்மணி யானையைப் பார்த்ததும் பயந்து மீண்டும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி உள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில் தற்பொழுது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுவதால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பதாகவும் வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து வனவிலங்குகள் ஊருக்குள் புகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
