காட்பாடி அருகே விவாகரத்து பெற்ற நர்சிங் கல்லூரி மாணவியை அரிவாளால் சாராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய முன்னாள் கணவரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்று தவறி விழுந்த அவரின் காலில் முறிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்கு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் மறைந்த தயாளன். இவரது மனைவி ஜோஸ்வின் தனியார் பல்கலைக்கழகத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகள் சேலட் சுஜி (21), அடுக்கம்பாறை அடுத்த காட்டுப்புடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.
சுஜிக்கும், காட்பாடி தாராப்படவேடு கோவிந்த முதலி தெருவைச் சேர்ந்த ஜீவா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.
எனினும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஓராண்டுக்கு முன்பு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர்.
நேற்று முன்தினம் இரவு சுஜி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த ஜீவா அங்கு அத்துமீறி நுழைந்துள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுஜியின் தலை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
சுஜியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட ஜீவா அரிவாளை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியோடினார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சுஜியை மீட்க 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அவ்வழியாகச் சென்ற ஆட்டோ மூலம் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்குத் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள ஜீவா அண்மையில்தான் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளிவந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று காலை காட்பாடி கோபாலசமுத்திரம் ஏரிக்கரை ஓரம் ஜீவா பதுங்கியிருப்பதாகக் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற ஜீவா ஏரிக்கரை ஓரம் தவறி விழுந்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜீவாவை மடக்கிப் பிடித்த போலீசார் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
