பாளையங்கோட்டையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், முதற்கட்ட கலந்தாய்வில் பெயர் இடம்பெறாததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை
பாளையங்கோட்டை அன்பு நகர் அருகே உள்ள சித்தார்த்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
அவருக்கு ஸ்ருதி லயா (வயது 21) என்ற மகள் மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளனர்.
ஸ்ருதி லயா பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2023-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்துள்ளார். அதன் பின்னர் அவர் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் பயிற்சி முகாமுக்கு சென்று படித்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு அவருக்கு மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்று முழு முயற்சியுடன் படித்துள்ளார். இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றார்.
தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் தற்போது துவங்கியுள்ளது.
அதில் தேர்வானர்களின் பட்டியல் வெளியான நிலையில் அதில் ஸ்ருதிலயாவின் பெயர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஸ்ருதிலயா
மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு தூங்க சென்றுள்ளார். காலையில் அவரது அறையில் ஸ்ருதி லயாவை காணவில்லை என்றதும் அவரது பெற்றோர் காம்பவுண்டு பகுதியில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் அருகே உள்ள ஷெட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஸ்ருதி லயா சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து பெருமாள்புரம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
