Headlines

அச்சுறுத்தும் மர்ம விலங்கு : பீதியில் பொதுமக்கள்

அச்சுறுத்தும் மர்ம விலங்கு : பீதியில் பொதுமக்கள்

​கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூர் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக நள்ளிரவில் உலா வரும் மர்ம விலங்கு ஒன்று பூனைகள் மற்றும் கோழிகளைக் கடித்துக் கொன்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

மேட்டுப்பாளையம் அடுத்த தாசனூர் பெருமாள் கோவில் வீதியின் பின்புறம் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகளை, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று கடித்துக் கொன்றது.

​இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு தாசனூர் பத்திரகாளியம்மன் கோவில் அருகே உலா வந்து 4 பூனைகளையும் அதே மர்ம விலங்கு கொடூரமாகக் கடித்துக் கொன்று போட்டு உள்ளது.

அடுத்தடுத்து வளர்ப்புப் பிராணிகள் மற்றும் கோழிகள் பலியாவதாலும், அந்த விலங்கு எதுவென்றே அடையாளம் தெரியாததாலும் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது.

​இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது,

“ஊருக்குள் உலா வந்து கோழி மற்றும் பூனைகளைக் வேட்டையாடுவது ‘காட்டுநாய்’ (Wild Dog / Dhole) ஆக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அதனைப் பாதுகாப்பாகப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்து உள்ளனர்.
​இருப்பினும், சிறு குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தாசனூர் பகுதியில் உடனடியாக வனத் துறையினர் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, கூண்டு வைத்து அந்த விலங்கைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *