தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகள் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிடப்படுவது அனைத்து முதலமைச்சர்களும் பின்பற்றி வந்த நடைமுறைதான். அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சரே பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பல்வேறு துறைகளின் தேவைகள் மற்றும் மானியக் கோரிக்கைகளுக்கு ஏற்ப முதலமைச்சர் 110-வது விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகக் கூறினார்.
காவல்துறையைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக நேற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேவையா என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதாகக் கூறிய அமைச்சர் செங்கோட்டையன், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் சட்டப்பேரவைக்காக கட்டடங்களை அமைக்க முயற்சித்ததாக தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ராணி மேரி கல்லூரியில் சட்டப்பேரவையை அமைக்க முயற்சி மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
110-வது விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவது துறையின் தேவைக்கும், மானியக் கோரிக்கைக்கும் ஏற்ப முதலமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கை என்றும், இதனை அனைத்து முதலமைச்சர்களும் பின்பற்றி வந்துள்ளனர் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
மந்தை புறம்போக்கு, நீர்வழி புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு உள்ளிட்ட நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் பட்டா வழங்கக் கூடாத நிலங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
ஆலயங்கள் தொடர்பான புறம்போக்கு நிலங்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும் என்றும், சம்பந்தப்பட்ட துறையின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சரே பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தபோது, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் சட்டப்பேரவையில் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றி கழகம் குறுகிய காலத்திலேயே அரசியல் களத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அந்தக் கட்சியை நம்பி தமிழக மக்கள் வாக்களித்துள்ளதாகவும், இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்துள்ளதாகவும், இரண்டே மாதங்களில் சின்னத்தைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழக மக்களை காப்பதற்கும், அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கும் முதலமைச்சர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அப்போது,“இந்திய பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்த முடியுமா?”என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு என்னை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்” எனக் கூறினார்.
மேலும், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் ஆற்றல், சிந்தனை மற்றும் தொலைநோக்குப் பார்வை தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
