கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகியமண்டபம் பகுதியில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், இரும்பு கட்டரை பயன்படுத்தி அடுத்தடுத்து மூன்று கடைகளின் ஷட்டர் பூட்டுகளை வெட்டி உடைத்துள்ளார்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அங்கிருந்த ஒரு சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகமூடி கொள்ளையனை தக்கலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்து கடைகள் மற்றும் கோவிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
