அமராவதி ஆற்றில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் மாவட்ட எல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து நிலையில்.

ஏற்கனவே இரண்டு முறை தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், அந்த தண்ணீர் கடைமடை பகுதிகளை சென்றடையவில்லை என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அமராவதி அணையில் இருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தாராபுரம் பகுதியிலேயே நின்று விட்டதாக கூறப்படுகிறது.
கடைமடை வரை தண்ணீர் சென்றடையும் வகையில் குறைந்தபட்சம் 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி, கரூர் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துரை பகுதியில் விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமராவதி ஆற்றின் கடைமடை பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்குத் தேவையான தண்ணீர், மேலும் குடிநீருக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்பதே வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில், காவிரி அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதைப் போல, அமராவதி ஆற்றிலும் விவசாயிகளின் நலன் கருதி 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
