விழுப்புரத்தில்
சாப்பிட்ட உணவிற்கு காசு கேட்ட முன் விரோதம் காரணமாக மூடிய ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் எதிரில் தனியார் ஹோட்டல் உள்ளது.
இந்த ஹோட்டல் நேற்று விடுமுறை விட்டதால் மூடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தாமரைக் குளம் பகுதியை சேர்ந்த தனுஷ் உள்ளிட்ட இளைஞர்கள் அந்த ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
அதனை அந்த இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர்.
அப்போது சாலையில் சென்றவர்கள் அச்சத்துடன் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கடையின் மேல் குடியிருந்து வரும் கடையின் உரிமையாளர் செளவுந்தரராஜன் கடையை திறந்து தீயை அணைத்து உள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தப்பிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஓட்டலுக்கு சாப்பிட வந்த இளைஞர்கள் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்கவில்லை. இதனை உரிமையாளர் கேட்டதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் நேற்று பூட்டி இருந்த கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் எதிரில் 100 மீட்டர் தொலைவில் மக்கள் நடமாட்டம் உள்ள பரபரப்பான கிழக்கு பாண்டி சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
