அரியலூர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை பணி முடித்து மீண்டும் ஊர் திரும்பும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது பேருந்துக்காக நின்று கொண்டிருந்த மாணவர்களில் சிலர் தங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
அப்போது
குடும்பத்துடன் மஃப்டியில் இருந்த காவலர் ஒருவர் மாணவர்களை விலக்க முயன்றும், மாணவர்கள் அதை பொருட்படுத்தாது தங்களுக்குள் கடுமையாக சண்டையிட்டு தாக்கிக் கொண்டிருந்தனர்.
மாணவர்களின் தாக்குதலைக் கண்ட பொதுமக்கள், பேருந்து நிலையத்திலிருந்து செய்வதறியாது சிதறி ஓடினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் காவல்துறையினரை கண்டதும் மாணவர்கள் தப்பி ஓடினர்.
இதனையடுத்து தங்களுக்குள் தாக்கிக் கொண்ட மாணவர்கள் யார்? எதற்காக தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர்? என்பது குறித்து போலிசார் விசாரணை நடத்தினர்.
அரியலூர் காவல் நிலையம் எதிரில் உள்ள பேருந்து நிலையத்தில்
பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் அரசு பள்ளி மாணவர்களின் இத்தகைய செயல், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
