புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே காட்டுநாவல் ஊராட்சி, துளுக்கம்பட்டி கிராமத்தில் இந்து மக்கள் விநாயகர் கோவில் கட்டுவதற்கு அதே கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் தங்களுக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை தானமாக கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் கூறுகையில்,
பல ஆண்டு காலமாக கோவில் கட்டப்படாமல் இருந்து வந்த நிலையில் அது தங்களுக்கு மிகுந்த வருத்தமாக இருந்து வந்தது. இந்து மக்கள் கோவில் இல்லாததால் சாமி கும்பிட முடியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்து மக்கள் தங்களை அணுகி இடம் கேட்ட போது தாங்கள் மனப்பூர்வமாக அந்த இடத்தை கொடுத்ததாகவும், தாங்கள் எப்படி மசூதிக்கு சென்று கடவுளை வணங்குகிறோமோ அதே போன்று இந்து மக்களும் அவர்களை கோவிலுக்கு சென்று சாமியை வணங்க வேண்டும் என்ற எங்கள் சமுதாய ஒட்டுமொத்த மக்களின் கருத்தின் அடிப்படையில் இந்த நிலத்தை கொடுத்ததாகவும், தமிழகம் முழுவதுமே இந்து முஸ்லீம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
தங்கள் ஊர் மக்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.அண்ணன், தம்பி,மாமன், மச்சான்களாக இந்து முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிலத்தை இந்து மக்கள் விநாயகர் கோவில் கட்டுவதற்கு கொடுத்ததாகவும், வருங்கால தலைமுறையினருக்காக தங்கள் குழந்தைகளுக்கு அனைத்து மக்களிடமும் அன்பாக பழக வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதாகவும் தெரிவித்தனர்.
