Headlines

ஆபரேஷன் டூபான்: போதை கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார் – ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்,3 பேர் கைது

ஆபரேஷன் டூபான்: போதை கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார் - ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்,3 பேர் கைது

தமிழக எல்லைப் பகுதியான கோவையில் முகாமிட்டு, காரின் கதவுகளுக்குள் ரகசிய அறை அமைத்து கடத்த முயன்ற சுமார் ரூ.10 கோடி சர்வதேச சந்தை மதிப்புடைய 12.80 கிலோ ‘எம்.டி.எம்.ஏ.’ வீரிய ரக போதைப்பொருளைக் கேரள மாநில தனிப்படை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த முக்கிய கடத்தல் புள்ளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கேரள காவல் துறையின் வரலாற்றிலேயே ஒரே ஒரு சோதனையில் இவ்வளவு பெரிய அளவில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பிடிபட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது 97 கிராம் அளவிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளுடன் சந்தேகத்திற்குரிய நபர்கள் பிடிபட்டனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலிருந்து பெரும் அளவில் வீரிய ரக போதைப்பொருள் கடத்தி வரப்பட்டு, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விநியோகிக்கப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, கடத்தல் நெட்வொர்க்கின் வேர்களை அறுத்தெறிய ‘ஆபரேஷன் டூபான்’ மாநில நோடல் அதிகாரி பூட்டா விமலாதித்யா., திருச்சூர் சரக டி.ஐ.ஜி. டி.நாராயணன் மற்றும் மலப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.விஸ்வநாத், உதவி காவல் கண்காணிப்பாளர் சைத்ரா தெரசா ஜான் ஆகிய உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவான ‘டான்சாப்’ மற்றும் மஞ்சேரி காவல் நிலைய தனிப்படையினர் தீவிர ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்த சர்வதேச கடத்தல் கும்பலின் முக்கிய நபர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்து, அங்கிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கி வருவது உறுதி செய்யப்பட்டது.

தகவலறிந்த மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.ஜி.திலீப் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்தனர்.

கோவையில் குறிப்பிட்ட தங்குமிடத்தை ரகசியமாக முற்றுகையிட்ட போலீசார், அங்கிருந்த 3 பேரை அதிரடியாக மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பந்தல்லூர், மாம்பாவளப்பில் பகுதியைச் சேர்ந்த ஜாபிர் அலி (வயது 32)
மஞ்சேரி ஆனைக்கயம், கடவத்துவூட்டைச் சேர்ந்த ஷயீம் அக்பர் (வயது 21)
வயநாடு மாவட்டம் மேப்பாடி, கரிம்பயில் பகுதியைச் சேர்ந்த முகம்மது சாஹில் (வயது 34)
என்பது தெரியவந்தது.

அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் பிரத்யேக கருவிகள் கொண்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது காரின் நான்கு கதவுகளின் உட்புற பேனல்களிலும் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட ரகசிய அறைகள் இருப்பது அம்பலமானது.

அந்த அறைகளுக்குள் 100 கிராம் முதல் 500 கிராம் வரை எடையுள்ள காற்றுப்புகாத பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 12.80 கிலோ கிராம் எடை கொண்ட எம்.டி.எம்.ஏ. படிகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச கள்ளச்சந்தையில் ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

நாக்பூரில் இவர்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்த முக்கிய ஏஜெண்டுகள் யார்? கோவையிலும் கேரளாவிலும் இதனை வாங்கி விநியோகம் செய்யவிருந்த இடைத்தரகர்கள் மற்றும் நெட்வொர்க் தொடர்புகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச போதைப் பொருட்களை கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்யும் கும்பலை கேரள மாநில போலீசார் கோவையில் வந்து கைது செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *