திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி மாரியம்மன்புரத்தைச் சேர்ந்தவர் உடன்குடி வில்லி குடியிருப்பில் பிரியாணி கடை நடத்தி வந்தார்.
அதே கடையில் வேப்பங்காடு பகுதியைச் சேர்ந்த பூபதி பொன்ராஜ் (37) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடை உரிமையாளர் இறந்தார்.
கடை உரிமையாளரின் மனைவி, எட்டு வயது மகன் மற்றும் ஐந்து வயது மகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடையில் வேலை செய்யும் பூபதி பொன்ராஜ் நேற்று கடை உரிமையாளரின் மகனான எட்டு வயது சிறுவனை தேரியூர் தென்றல் நகர் காட்டுப்பகுதிக்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், கட்டாயப்படுத்தி சிறுவனை மது குடிக்க வைத்துள்ள அவர், அதை தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
வீடு திரும்பிய சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது சித்தப்பாவிடம் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் சிறுனின் சித்தப்பா புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து வீடியோ எடுத்த பூபதி பொன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
