தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார். காரும் வேனும் தீயில் கருகி முற்றிலும் சேதமானது.
மதுரையிலிருந்து குற்றாலத்தை நோக்கி சுற்றுலாப் பயணிகளுடன் வந்த வேனும், தென்காசியில் இருந்து எதிரே வந்த காரும் இலத்தூர் விலக்கு அருகே எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களிலும் கணநேரத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில் காரில் இருந்த ஓட்டுநர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும், விபத்தில் காயமடைந்த 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வாகனங்கள் முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், காவல்துறையினர் போக்குவரத்தைச் சரிசெய்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
