Headlines

காங்கிரசிற்கு ஒதுக்கியது ஏன்? தவெக வெற்றிக்கு உன் மகன் காரணம் : உதயம் சண்முகம் vs ரகுபதி

காங்கிரசிற்கு ஒதுக்கியது ஏன்? தவெக வெற்றிக்கு உன் மகன் காரணம் : உதயம் சண்முகம் vs ரகுபதி

புதுக்கோட்டையில் திமுக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மறு சீரமைப்பு தொடர்பாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகத்திற்கும், முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கும் வார்த்தைப்போர் நிலவியது.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக தலைமை கழகத்தை மறு சீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் இரண்டு இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒரு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது

அதே போன்று நகரம் பேரூர் கிளைக் கழகமும் பிரிக்கப்பட்டுள்ளது .

கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மற்றும் கருத்து கேட்கும் கூட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்ததை தொடர்ந்து புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைத்த மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்பி, மாநில விவசாய செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் மற்றும் பேச்சாளர் பாலா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், எம் எல் ஏ முத்துராஜா, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் தலைமை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

இந்த நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருக்கிற போது, பல்வேறு விதமான கருத்துக்கள் தொடர்பாக நிர்வாகிகளுக்கும், முன்னாள் அமைச்சருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டபோது முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் எம்பி எ கே எஸ் விஜயன் ஆகியோர் சமரசம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் திடீரென முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் எழுந்து ஆவேசமாக மேடை நோக்கி சென்று மேடையில் ஏறி மைக்கை பறித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி 2026 திமுக ஜெயிக்க வேண்டிய தொகுதி.
அதை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது ஏன்?. தொடர்ந்து அறந்தாங்கி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவது ஏன் ?என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இதனால் மேடையில் இருப்பவர்களுக்கும் உதயம் சண்முகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரகுபதி அதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட அமைச்சராக உள்ள பர்வேஸ் வெற்றி பெற்றதற்கு காரணமே உங்கள் மகன்தான்.

அவர்தான் பர்வேசை தெருத்தெருவாக அழைத்துச் சென்று பிரச்சாரம் செய்ததன் விளைவாகத்தான் அவர் வெற்றி பெற்றார்.

தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதற்கு உங்களுடைய மகன்தான் காரணம் என் கூறியதால் மேடையிலேயே இருவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிறகு சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

உடனடியாக ஏ கே எஸ் விஜயன் எழுந்து சரமாரியாக நிர்வாகிகளை கண்டித்து பேசினார்.

தொடர்ந்து அனைவரையும் சமாதானப்படுத்தி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு கருத்துக்களை ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *