வாணியம்பாடி அருகே இரண்டு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே நடந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் கத்தியுடன் மோதி கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அச்சத்தையும்,பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய கொல்லகுப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிஷோர் குமார் ,பரத் ,அஜய் ஆகிய 3 பேர் இரு சக்கர வாகனத்தில் வாணியம்பாடி மேட்டுபாளையம் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் பெரிய கொல்லகுப்பம் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது கொல்லகுப்பம் நுழைவாயிலில் உள்ள காணாற்று அருகே சென்ற போது சுப்பராயன்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள அஜித் உட்பட அவரது நண்பர்கள் இரு சக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது பெரிய கொல்லகுப்பம் பகுதியில் இருந்து இளைஞர்கள் சென்ற இரு சக்கர வாகனம் பிரேக் பிடிக்காமல் நிலை தடுமாறி குறுக்கே நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனம் மீது லேசாக மோதியுள்ளது.
இதனால் மது அருந்தி கொண்டு இருந்த சுப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து மேல் கொல்லகுப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்து அவர்களை தாக்கி உள்ளனர்.
பின்னர் மேலும் சுப்பராயன் கோவில் பகுதியில் இருந்து சுமார் 10 கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கத்தி மற்றும் இரும்பு கம்பிகளை எடுத்து கொண்டு மேல் கொல்லகுப்பம் பகுதிக்கு சென்று அராஜகம் செய்து அங்கிருந்த இளைஞர்கள் சுமார் 7 பேரை கத்தியால் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி உள்ளனர்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயமடைந்த 7 பேரை மீட்டு சிகிச்சையாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்ற சுப்பராயன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.
இளைஞர்கள் கத்தியுடன் சுற்றி திரிந்து மோதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும்,பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
