சாத்தூர் அருகே அமைச்சரின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் உடன் பிறந்த சகோதரியான ஜெயசக்தி என்பவருக்கு சொந்தமான சின்னத்தம்பி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் 5க்கும் மேற்பட்ட அறைகளில் 15க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப்பொருளில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக பட்டாசு ரசாயன மூலப் பொருட்கள் வெடித்து சிதறியதில் இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது.
அறை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் தீயில் கருகி சேதமானது.
சம்பவம் அறிந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிட இடுப்பாடுகளுக்குள் கருகிய நிலையில் மீனம்பட்டியை சேர்ந்த மாடசாமி என்ற தொழிலாளியின் உடலை மீட்டனர்.
மேலும் இந்த வெடி விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
