கோவையில் போதைப் பொருள்கள் கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ரூ. 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை மராட்டியத்தில் இருந்து அவர்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்களை தடுக்க போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தின் பின்புறத்தில் சிலர் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பொழுது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் இருந்தது. உடனே போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
/
அதில் அவர்கள் கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த சஞ்சய், மதன் பாலாஜி, ஜெகத் ஹரி, வெள்ளலூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக், நாகராஜன், செட்டிபாளையத்தைச் சேர்ந்த சூர்யா, பீளமேடைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பது தெரியவந்தது. அத்துடன் அவர்கள் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வரும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா, 1,708 போதை மாத்திரைகள் மற்றும் ரூபாய் 21,000 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.







இது குறித்து போலீசார் கூறும் போது;
கைதான 7 பேரும் மராட்டிய மாநிலத்துக்குச் சென்று அங்கு போதை மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி கோவைக்கு கடத்தி வந்து உள்ளனர்.
அதாவது ஒரு மாத்திரையை ரூ. 30 க்கு வாங்கி இங்கு ரூபாய் 300 க்கு விற்பனை செய்து வந்து உள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மதிப்பு ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
