நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் ,
நேபாளம் காட்டாற்று வெள்ள பாதிப்பு தொடர்பாக இந்திய அரசு மற்றும் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தேவையான முதலுதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட தகவலின்படி தமிழகத்திலிருந்து 103 பேர் அங்கு சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர்களில் 26 பேர் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
சிலரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழுக்களாகச் சென்றவர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.
ஆனால் சிறு குழுக்களாகவோ, தனியாகவோ சென்ற சிலரை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. அவர்களது குடும்பத்தினரும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
பேரிடர் பாதித்த பகுதியில் 70-க்கும் மேற்பட்ட பாலங்களும், 40-க்கும் மேற்பட்ட இணைப்புச் சாலைகளும் சேதமடைந்துள்ளதால், சாலை வழியாக மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களை அழைத்து வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சாலை மற்றும் ஆகாய மார்க்கம் என இரு வழிகளிலும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை பிற்பகல் வரை 900-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும், தொடர்ந்து வரும் அழைப்புகளுக்கு தேவையான பதில்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் நிலவரம் குறித்து தகவல் அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட தமிழக மக்களை விரைவாக மீட்டு, டெல்லிக்கு அழைத்து வந்து, அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
“பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்திலும், துயரத்திலும் தமிழக அரசு பங்கெடுத்துக் கொண்டிருக்கிறது” என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
