நேபாள வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளின் தற்போதைய சூழல் குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 பேர், குரோம்பேட்டை மகாதேவி யாத்ரா நிறுவனம் மூலம் கடந்த 14ஆம் தேதி 14 நாட்கள் ஆன்மீக சுற்றுலாவாக நேபாளம் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுற்றுலா வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளதால், அங்கு சென்றுள்ள 6 பேரின் நிலை குறித்து அவர்களது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் தற்போதைய நிலை குறித்து அரசு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை விடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட டூரிஸ்ட் ஏஜென்சி மூலமாக தமிழகத்தைச் சார்ந்த 49 நபர்கள் சென்றுள்ளார்கள் இதில் காஞ்சிபுரத்தில் இருந்து சந்திரன், அருட்செல்வன்,லதா பானுமதி,கோபால்,சரஸ்வதி,மீனாட்சி,என 6 பேர் சென்றுள்ளதாக சுற்றுலா நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
