நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கிக்கொண்ட மயிலாடுதுறை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பேருந்து மூலம் கடந்த 23ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர் 3 பேருந்துகளில் சுற்றுலா சென்றுள்ளனர். இன்று காலை காட்மாண்டில் இருந்து நேபாள் சென்றுள்ளனர். நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சுற்றுலா சென்ற பயணிகள் 57 பேர் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியானது. சுற்றுலா சென்ற பயணிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த புஷ்பலதா, ரத்தினகுமார், பூங்குழலி, மணிமேகலை மயிலாடுதுறை செட்டி தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம், ராஜேஸ்வரி, மயிலாடுதுறை கறைநாடு தோப்புத் தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் உள்ளிட்ட 7 பேர் சுற்றுலா சென்றது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் ஏழு பேரின் வீடுகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் வருவாய் துறையினர் மயிலாடுதுறை செட்டி தெரு சிவஞானம் உறவினர்களை சந்தித்து விசாரணை செய்தனர். இதுபோல் மயிலாடுதுறை கூரைநாடு தோப்பு தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் உறவினரை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
இருவரும் பாதுகாப்பாக உள்ளதாக அயலகத் துறையினர் தெரிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.ஆனாலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அச்சம் தெரிவித்தனர். தங்கள் உறவினர்கள் பாதுகாப்பாக உள்ளனரா? என்று தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மணிமேகலை என்பவர் மயிலாடுதுறை அபிராமி நகர சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மூன்று பேரின் வீடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பேரின் வீடுகளை கண்டறியும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
