ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ( 24-05-2026) அன்று நேரிட்ட சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த சமையல் தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்து குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
சிவகங்கை மாவட்டம் செலுகை அடுத்த தளுதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (60). இவரது உறவினர் தூணுகுடி பகுதியைச் சேர்ந்த குமரேசன் (70). சமையல் தொழிலாளர்களான இவர்கள் இருவரும், தங்களது தொழில் நிமித்தமாக திருவாடானையிலிருந்து ஆர்.எஸ்.மங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் ஏ.ஆர்.மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த மாருதி ஸ்விப்ட் கார் எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது.
இவ்விபத்தின் தாக்கத்தால் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட கருப்பையா, குமரேசன் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவாடானை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் (43) என்பவர் மீது ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாழ்வாதாரத்திற்காகச் சென்ற முதிய தொழிலாளர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
